Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை தொடங்கியது; தாய் சித்ரா கதறி அழுதார்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

 

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. கோகுல்ராஜின் தாய் சித்ரா சாட்சியம் அளித்தார். 

 


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் & சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். ஆரம்பத்தில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

gukulraj

 

 

 


இவர்களில் அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிமணி (40) பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். அப்போது சொத்துப் பிரச்னையில் ஜோதிமணியை அவருடைய கணவர் சந்திரசேகர் கடந்த 7.2.2018ம் தேதி சுட்டுக்கொன்று விட்டார்.
இது ஒருபுறம் இருக்க, கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அவருடைய முகாம் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு ஆகிய இரண்டையும் விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், விஷ்ணுபிரியா வழக்கு மட்டும் சிபிஐ போலீசாருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

gukulraj

 

 

 

இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ், கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த ஜாமின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜின் நீதிமன்ற காவலை, விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் காணொலி காட்சி வாயிலாக நீட்டித்து வந்தது. இது ஒருபுறம் இருக்க, யுவராஜை பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 18 மாதங்களுக்குள்¢ விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 10.10.2017ம் தேதி உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜிக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தது.

 


இதைத் தொடர்ந்து யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், கார் ஓட்டுநர் அருண் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த இருவர் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட ஜோதிமணி ஆகிய மூவரையும் தவிர மற்ற 14 பேரும் பிணையில் விடுதலை ஆகியிருந்தனர். இந்த 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ஹெச். இளவழகன் அழைப்பாணை அனுப்பி இருந்தார்.இவர்களில் அமுதரசு என்பவரை தவிர மற்ற 13 பேரும் கடந்த ஜூன் 7ம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்றிருந்த செல்வராஜ் தவிர 12 பேரின் பிணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 


இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மீது குற்ற வரைவு சுமத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்ட யுவராஜ், கொலை வழக்கு தொடர்பாக முழுமையான ஆவணங்கள் தராமல் குற்ற வரைவு சுமத்தக்கூடாது என நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நீதிபதி இளவழகன், ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) முதல் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

 

 

 


அதன்படி கோகுல்ராஜ் கொலை வழக்கின் சாட்சிகளிடம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமுதரசு தவிர மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதல் நாளான இன்று கோகுல்ராஜின் தாய் சித்ரா, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கொலை செய்யப்பட்ட அன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளைக் காட்டி அவரிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதிப்படுத்திக் கொண்டார். இதையடுத்து விசாரணையை வரும் 1.9.2018ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். 

 


அன்று முதல் யுவராஜ் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி கூறினார். விசாரணை நேரம் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.சாட்சியம் அளிக்க வந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, விசாரணை அரங்கத்திற்குள் நுழைந்தபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்டோரை பார்த்து, ஆபாச வார்த்தைகளால் திட்டினார். சாட்சி கூண்டில் நின்று பதில் அளித்த அவர் மகனை நினைத்து பலமுறை நெஞ்சில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். 

 


மதியம் 1.05 மணிக்கு தொடங்கிய விசாரணை, 1.40 மணி வரை நடந்தது. உணவு இடைவேளை முடிந்து, 2.50 மணிக்கு மீண்டும் விசாரணை ஆரம்பமானது. கோகுல்ராஜின் தாய் உள்ளே நுழைந்தபோது அவரிடம் நீதிபதி இளவழகன், காலையில் இன்று நீங்கள் வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து பேசிய முறை சரிதானா?. இந்த இடத்தில் வந்து அவ்வாறு பேசலாமா? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். இனிமேல் அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மென்மையாக கடிந்து கொண்டார். அதற்கு சித்ரா, அவரைப் பார்த்து, இருகரங்களைக் கூப்பியபடி, 'இனிமேல் அப்படி பேசமாட்டேன் அய்யா மன்னித்து விடுங்கள் அய்யா...' என்றார்.  என்று கேட்டார். 


அப்போது அவரிடம் சம்பவத்தன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளைக் காட்டி, அடையாளம் காட்டுமாறு கூறினர். ரத்தக்கறை படிந்த ஜீன்ஸ் பேன்ட், சட்டை, உள்ளாடை, பனியன் ஆகியவற்றைப் பார்த்ததும் தாள முடியாமல் மீண்டும் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கதறி அழுதார். மேற்கொண்டு அவரால் பேச முடியவில்லை. 

 

 

 


உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவரை கொஞ்ச நேரம் வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்றார் நீதிபதி. பெண் போலீசார் சித்ராவை அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் சாட்சி கூண்டுக்கு வந்த சித்ராவிடம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். உடைகளைப் பார்த்து இன்றே உறுதி செய்கிறீர்களா? அல்லது வேறு ஒரு தேதியில் சொல்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு சித்ரா வேறு ஒரு தேதியில் சொல்கிறேன் என்றார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் செப். 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மாலை 3.05 மணிக்கு விசாரணை முடிந்தது.

 


நீதிமன்றத்திற்கு வெளியே யுவராஜ் தரப்பினரைப் பார்த்து கோகுல்ராஜ் உறவினர்கள் ஏதேதோ ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதேபோல், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட யுவராஜ் ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.கோகுல்ராஜ் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் உதவி மாவட்ட வழக்கறிஞருமான பி.கருணாநிதி ஆஜராகி சாட்சியிடம் விசாரணை நடத்தினார்.

 


யுவராஜ் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, எல்.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் பாரிவேலன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், உடுமலை ராஜேந்திரன், சேலம் அரவிந்த் ஆகியோர் ஆஜராகினர். வரும் செப். 1ம் தேதி முதல் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளும் நடக்கும் என்பதால் இந்த வழக்கு விசாரணை மேலும் பரபரப்பு கட்டத்தை நோக்கி நகரும் எனத்தெரிகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.