Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசுத்தரப்பு சாட்சியிடம் ஜன. 18ம் தேதி குறுக்கு விசாரணை! 

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
vao


கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலரிடம் வரும் 18.1.2019ம் தேதி குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் அவருடைய சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.


இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். 


இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. கைதானவர்களில் ஜோதிமணி, அமுதரசு தவிர மற்ற 15 பேர் ஆஜராகி வருகின்றனர்.


கடந்த 10ம் தேதி, அரசுத்தரப்பில் 41வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். குற்றவாளிகளை கைது செய்தபோது சிலரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.


அவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒரு வாகனத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வராததால், மறுநாளுக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி நேற்று (11.1.2019) விஏஓ மணிவண்ணனிடம் தொடர்ந்து இரண்டாம் நாளாக விசாரணை நடந்தது.


சம்பவத்தன்று யுவராஜ் பயன்படுத்திய செந்தில் என்பவருக்குச் சொந்தமான 5506 என்ற பதிவெண் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிளை போலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அந்த வாகனத்தை அரசுத்தரப்பு சாட்சி நேற்று சரியாக அடையாளம் காட்டினார்.  


இதையடுத்து, கைது செய்யப்பட்ட எதிரிகளில் ஒருவரான குற்றவாளி கூண்டில் இருக்கும் சதீஸ் என்பவரை அடையாளம் காட்டுமாறு அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் கூறினார். ஆனால் அரசுதரப்பு சாட்சி, அவரை இரண்டாம் முறையாகவும் தவறாக அடையாளம் காட்டினார். மேலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளை பார்த்து எதிரிகளை அடையாளம் காட்டச்சொன்னார்.


அதற்கு விஏஓ மணிவண்ணன், மூக்குக் கண்ணாடியை எடுத்து வராததால், வீடியோ பார்த்து அடையாளம் சொல்ல முடியாது. அடுத்து முறை சொல்வதாக கூறினார். இதையடுத்து சாட்சி விசாரணையை வரும் 18.1.2019ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். 


அன்றைய தினம் அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான விஏஓ சுரேஷ் என்பவரும் அன்று சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்டு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Armstrong praises senior advocate  mohan

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சந்தித்து மரியாதை செலுத்தி நன்றி தெரவித்தார். 

 

“பல்வேறு மிரட்டலும் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தபோதும், தன் உயிர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட உரிமை இழந்து வாடும் மக்களின் உரிமைக்காக போனால் போகட்டும் என தன்னுயிரை துச்சமாக நினைத்து எட்டு வருடப் போராட்டங்களுக்கு பிறகு ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும், விடாமுயற்சியால் உண்மை வெல்லும் என அடுத்தடுத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடி ஆயுள் தண்டனையை பெற்றுத் தந்துள்ள உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ராங் தெரிவித்தார்.  

 

 

Next Story

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 Separate law to prevent caste incident

 

கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு  காதலர்கள் சென்ற போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது.

 

அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் கொலைக்கு சாதி தான் முக்கிய காரணம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், சாதி என்ற பேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் முன்னிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

 

இந்தியா முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.