Skip to main content

கடலுக்குச் சென்றும் ஏமாற்றமே மிஞ்சியது; நாகை மீனவர்கள் வேதனை!

Published on 28/06/2020 | Edited on 29/06/2020

 

nagai fisherman

 

மூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்று வந்த மீனவர்கள் பிடித்துவந்த மீனை விற்க முடியாமல், வாங்க ஆளில்லாமல் தவிப்பது மேலும் அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டதுதான் காரணம் என மீனவர்கள் வேதனை அடைகின்றனர்.

 

மீன்பிடி தடைக்காலம், கரோனா ஊரடங்கு என அடுத்தடுத்த காரணங்களால் சுமார் மூன்று மாதங்களாக கடலுக்குச் செல்லாமல் முடங்கிக் கிடந்த மீனவர்கள் கடந்த வாரம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் பெரும்பாலான படகுகள் காலை கரை திரும்பியது. மீனவர்கள் பிடித்துவந்த மீன்களை வாங்க மிகக் குறைந்த அளவிலேயே உள்ளூர் வியாபாரிகளும், பொதுமக்களும் மட்டுமே நாகை துறைமுகத்தில் குழுமியிருந்தனர். அதேவேளையில் வெளியூர், வெளிமாவட்ட, வெளிமாநில மீன்வியாபாரிகள் வரவில்லை, அதற்குக் காரணம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் வாங்க வேண்டும் என்கிற அறிவிப்புதான் என்கிறார்கள் மீனவர்கள்.

 

இதுகுறித்து மீனவர் சங்க தலைவர்களுள் ஒருவரான அக்கரைப்பேட்டை மனோகரன் கூறுகையில், "சுமார் 90 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்று வந்துள்ளோம், கடலில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டோம். ஊரடங்கு கட்டமைப்பால் நாகை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட, வெளிமாநில மீனவர்கள் மீன் வியாபாரிகள் வரமுடியாத சூழ்நிலையில் வியாபாரம் மோசமாகிவிட்டது. நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதியும் செய்ய முடியவில்லை. பெரிய விசைப்படகுகளில் ஒரு முறை மீன் பிடிக்க செல்ல மூன்று லட்சம் வேண்டும், அதேபோல சிறிய படகுகளில் செல்ல இரண்டு லட்சம் செலவாகும். வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் விற்பனை பாதிக்கப்பட்டுவிட்டது.

 

மீன்களின் விலையும் சரிந்துள்ளது. கிலோ 800 ரூபாய்க்கு விற்ற வஞ்சரம் வெறும் 450 க்கு விற்கிறது. கானாங்கெளுத்தி 130க்கு விலை போகிறது. செலவு செய்த பணத்திற்குக் கூட ஏலம் போகவில்லை. நாகப்பட்டினத்தில் மட்டும் இரண்டரை கோடி மதிப்புள்ள மீன்களைக் கொண்டு வந்தோம் இதில் பாதி அளவு கூட விற்கவில்லை." என்கிறார் வேதனையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.