சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணன், பெண் எஸ்.பி. ஒருவருக்குக் கூடுதல் டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெண் எஸ்.பிக்கு கூடுதல் டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. டி.கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, எஸ்.பி. கண்ணன் தரப்பில், கூடுதல் டிஜிபி அறிவுறுத்தலின்படி தான் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு, பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். காவல்துறையிலேயே அவ்வாறு நடத்தப்படாதது அவமானகரமானது. காவல்துறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால், காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.