திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சோளக்கம்பட்டியில் வசித்து வருபவர் விவசாயி சுப்பிரமணி. இவர், தண்ணீர் பற்றாகுறையால் பயிர் விவசாயத்தை கைவிட்டு தற்போது கால்நடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். வீட்டின் அருகே உள்ள களத்தில் கால்நடைகளை வைத்து வளர்த்து வரும் சுப்பிரமணி, நேற்று மாலையில் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு திரும்பிய ஆடுகளை களத்தில் இருந்த பட்டியில் 40 ஆடுகள் மற்றும் 20 குட்டிகள் என அடைத்துள்ளார்.
பின் வீட்டிற்கு சென்று உணவு அருந்திவிட்டு களத்திற்கு வந்தவர் இரவு 11 மணிக்கு வரை அங்கிருந்துவிட்டு பின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து காலையில் வந்து பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 6 ஆடுகளும், 6 குட்டிகளும் கழுத்தில் பற்கள் வைத்து இரத்தம் முழுவதும் உறிஞ்சப்பட்டு, மார்பு பகுதிகள் கடித்து குதறப்பட்டு உடல் உறுப்புகளை தின்று மர்ம விலங்கு தாக்குதலில் உயிரிழந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வருவாய்த்துறை ஆய்வாளர் வில்லியம் சார்லஸ், வனத்துறையினர் வனவர் செல்வேந்திரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மர்ம விலங்கால் ஆடுகள் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.