விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆகிய ஊர்களில் வாரம் தோறும் வாரச்சந்தை பரபரப்பாக நடைபெறும். இந்த சந்தைகளில் காய்கறிகள், ஆடுகள், கோழிகள் அதிக அளவில் விற்பனையாகும். தற்போது ரம்ஜான் பண்டிகை விரைவில் வர இருப்பதை ஒட்டி செஞ்சி சந்தை மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் திருவண்ணாமலை, சென்னை, ஓசூர், வேலூர், புதுச்சேரி, பெங்களூர், ஆந்திர மாநிலம் சித்தூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இந்தச் சந்தையில் ஒரு ஆட்டின் விலை பத்தாயிரம் என்ற விலையில் விற்கப்பட்டது.
அதேபோல் வேப்பூரில் நடைபெற்ற வாரச்சந்தையில் அதிக அளவில் வியாபாரிகள் வருகை தந்து கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறியாடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு என வகை வகையான ஆடுகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். வேப்பூரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஆடுகள், ரூபாய் நான்கு கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
செஞ்சி, வேப்பூர் வாரச் சந்தைகளில் மட்டும் சுமார் பத்து கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது கடந்த இரண்டு ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகை கரோனா காரணமாக கொண்டாடவில்லை. வீடுகளிலேயே அவர்களுக்குள் பண்டிகையே கொண்டாடிக் கொண்டனர். தற்போது அரசு பண்டிகை கால விழாக்கள் நடத்துவதற்கு அனுமதித்துள்ளது. அதன் காரணமாக ரம்ஜான் பண்டிகை விமரிசையாக கொண்டாடுவதற்காக அதிகளவு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. வியாபாரிகள் அதை வாங்கி செல்கிறோம் என்றனர்.