Skip to main content

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு; ஜி.கே.வாசன் கண்டனம்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

GK Vasan condemned meeting

 

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, த.மா.கா., சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், திங்கள்கிழமை (செப். 19) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் உலகநம்பி, வழக்கறிஞர் செல்வம், சுசீந்திரகுமார் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக அரசு, மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாதந்தோறும் மின் பயன்பாடு அளவீடு நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதை செயல்படுத்தாமல் வரலாறு காணாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வேதனையாக உள்ளது.  

 

கடந்த ஆட்சியின்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு தீவிர போராட்டம் நடத்திய திமுக, தற்போது ஆளுங்கட்சியே சொத்து வரியை உயர்த்தி இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத, வெளிப்படைத் தன்மை இல்லாத அரசாக இந்த ஆட்சி உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. போதைப் பொருள்கள் விற்பனையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. 

 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய இந்த அரசு தவறி விட்டது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதோடு, சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். வளர்ந்த நாடுகள் கொரோனாவின் தாக்கத்தால் நலிவடைகிறது. ஆனால் 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. அதற்குக் காரணம், மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் நல்லமுறையில் செயல்படுவதே ஆகும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.” இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.

Next Story

த.மா.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜி.கே.வாசன் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நேற்று (31-03-24) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார்.