
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “இலவசங்கள் கொடுப்பது முக்கியம். ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டில், ஏராளமான வேறுபாடுகள் உள்ள மக்கள் வாழும் நாட்டில் எளியவர்களுக்கு இலவசங்களும் சலுகைகளும் தரப்பட வேண்டியது மிக மிக முக்கியம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டில் உடன்பாடில்லை' என்றார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய வாக்குறுதிகள்: திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம், புதிய தொழில் முனைவோருக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு, ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.