Skip to main content

எம்.ஜி.ஆர்க்கு புகழ் சேருங்கள்! மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்!”-ஸ்டாலின்

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

சென்னையில் 30.09.2018 (நாளை) நடைபெறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என மக்களவைத் துணைத் தலைவர் மாண்புமிகு தம்பிதுரை அவர்கள் தெரிவித்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையேயான நட்பு குறித்தும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

 

stalin

 

அதேநேரத்தில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட; எதிர்க்கட்சியான தி.மு.கழகத்தையும், குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி மகிழ்ந்திருந்த தலைவர் கலைஞர் அவர்களையும், அவரது குடும்பத்தாரையும், கலைஞர் பெரிதும் நெருக்கமாக நேசித்த இயக்கத்தினரான உடன்பிறப்புகளையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதலமைச்சரில் தொடங்கி துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கறிவார்கள். 

 

முதலமைச்சர் உள்ளிட்டோரின் அந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையை மாண்புமிகு மக்களவை துணைச் சபாநாயகர் அவர்களுக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான முறையில் - உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

 

தற்போது என்னிடம் கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பை நினைவூட்டும் தம்பிதுரை அவர்களும், அழைப்பிதழில் பெயர் இடம் பெறச் செய்திருந்த முதலமைச்சர் –துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும், 2016 ஜனவரியிலேயே முறைப்படி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரிடம் நினைவூட்டியிருக்கலாம்.

 

அப்போது எம்.ஜி.ஆர் அவர்களையே மறந்துவிட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, ஓராண்டு காலம் தாழ்த்தி, அரசியல் காரணங்களுக்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கடைசியாகக் கையிலெடுத்திருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை.

 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். கழகப் பிரச்சார நாடகங்களில் நான் பங்கேற்றபோது தலைமையேற்று சிறப்பித்தவர். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவருடைய நூற்றாண்டு தொடக்கத்திலேயே முரசொலியில் “உங்களில் ஒருவன்” பகுதியில் எழுதியிருக்கிறேன் என்பதை நினைவூட்டுகிறேன். அதுபோலவே, அரசு சார்பிலான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலருக்கும் என்னுடைய கட்டுரையைத் தந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். என்பதை பொது அரங்குகளிலேயே சொல்லியிருக்கிறேன். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு. அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.