'Give Coke and Pepsi to those who have come' - Ramadoss welcomed

பாமகவில் ஏற்பட்ட அதிகார மோதலுக்கு பின் நேற்று முன்தினம் (05/06/2025) காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க குருமூர்த்தி மூலம் பேசப்பட்டதாக யூகங்கள் கிளம்பின. அதேநேரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி ராமதாஸும், அன்புமணியும் இணைந்து விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பார்கள் எனதெரிவித்திருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னை புறப்பட்ட நிலையில் சென்னை சென்ற அவர் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், ''முகுந்தன் விவகாரம் முடிந்து போனது. எல்லா பிரச்சனைகளும் நல்லபடியாகதீர்வு கிடைக்கும் என உங்கள் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கூட்டணியை முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. கூட்டணி தொடர்பாக பாஜகவில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை'' என்றார்.

வெயிலில் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு தாகத்தை தணிக்கும் வகையில் அங்கிருந்த உதவியாளரிடம் இவர்களுக்கு கோக் அல்லது பெப்சி ஆகியவற்றை கொடுங்கள் என ஒரு முறைக்கு இருமுறை அறிவுறுத்தினார்.

Advertisment

கடந்த 2003 ஆண்டு தேசிய அளவில் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களின் குளிர்பானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என இதே பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 'நச்சுப் பொருட்கள் நிறைந்த இந்த பானங்களால் மக்களுக்கு கெடுதல் தான், மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து அதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வரும் இந்த நிறுவனங்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.

இதனால் மத்திய அரசு இந்த இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். மாநில அரசுகள் விற்பனை லைசென்ஸ்களை உடனே ரத்து செய்ய வேண்டும். இவற்றுக்குப் பதிலாக நம் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் குளிர்பானங்களுக்கு ஊக்குவிப்புத் தர வேண்டும்' என பேசி இருந்தார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.