காதலியை பார்க்க விடாததால் காதலியின் தந்தையை காதலன் நள்ளிரவில் தாக்கி, காலை உடைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவியின் குடும்பத்தாருக்கு இந்த காதல் விவகாரம் தெரிய வர, அதனைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால் காதலனை சந்திப்பதை சில மாதங்களாகவே கல்லூரி மாணவி தவிர்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு என்ஜிஓ காலனியில் உள்ள காதலியின் வீட்டிற்கு ரஞ்சித் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மாணவியின் தந்தை சீனிவாசன் அனுமதி மறுத்த நிலையில் ரஞ்சித் அவரை தாக்கியதோடு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதலில் மாணவியின் தந்தைக்கு காலில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் தந்தையை மருத்துவமனைக்கும், ரஞ்சித்தை காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தகராறு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.