வாழப்பாடியில், திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த 17 வயதே ஆன சிறுமி, குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் படிப்பு முடிந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். திருமணம் ஆகாத நிலையில், இவர் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவி, பிரசவத்திற்காக வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப். 6ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. பிரசவ சிகிச்சைக்குப் பிறகு அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், அதே பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஏப். 7ம் தேதி அதிகாலையில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து மாணவியை அவருடைய உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? தனியார் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.