திருப்பூரில் அரசு பள்ளியில் பயின்று வந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகள் நிதர்சனா. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். வழக்கம்போல இன்று காலை நிதர்சனா பள்ளிக்கு சென்ற நிலையில், வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே மாணவியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ள போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.