திருச்சி, சமயபுரம், கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி யாழினி(13). சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விருதுகள் பெற்ற மாணவியை பரிசுகள் வழங்கி பாராட்டினர். இவர் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில் மார்ச் 8ஆம் தேதி உலக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட பொது நூலகத்தில் நூலக தலைமை அலுவலர் சிவக்குமார் மற்றும் தமிழ்ச்செம்மல், கவிஞர் கோவிந்தசாமி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து தரப்பினருக்கும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளி மாணவி யாழினியும் பங்கேற்றார். இந்நிலையில் 13 வயதில் 15 விருதுகள் பெற்று சாதனை படைத்த மாணவி யாழினியை ஊக்கப்படுத்தும் விதமாக நூலக அதிகாரிகள் வாழ்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
கடந்த வாரம் 2022ம் ஆண்டிற்கான சூரியனின் விடியல் விருதான கவிநயம் கலைஞர் விருது மாணவி யாழினிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.