திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் பூபதி. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புத்தி பிரியா என்ற மனைவியும், இரண்டு வயதில் மிதுலா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மிதுலா ஸ்ரீ, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிலிருந்த சில்வர் தண்ணீர் பாத்திரத்தில் சிறுமி இறங்கியிருக்கிறாள். அப்பொழுது எதிர்பாராத விதமாக மிதுலா ஸ்ரீ பாத்திரத்தில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் கதறி அழுத நிலையில், குழந்தையின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தை சில்வர் பாத்திரத்தில் மாட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு குழந்தையை மீட்க போராடியுள்ளனர். ஆனால், பெற்றோரால் முடியாததால், அவர்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பாத்திரத்தில் மாட்டி இருந்த குழந்தையின் தலையை வெளியே எடுக்க முயன்று, பின்னர் எந்திரத்தை கொண்டு பாத்திரத்தை இரண்டாக வெட்டி பிளந்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.