தேடினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோருக்கு மிரட்டலாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சேலம் பள்ளி மாணவி, மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித்தொழிலாளி. இவருடைய மகள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (செப். 4) அன்று இரவு, வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். மறுநாள் காலை எழுந்தது பெற்றோர் பார்த்தபோது, மகளை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், மகளின் நெருக்கமான தோழிகள், உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனாலும் மகள் எங்கே சென்றாள் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, வீட்டில் சிறுமி எழுதி வைத்துவிட்டுச் சென்ற ஒரு கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், ''என்னை யாரும் தேட வேண்டாம். அப்படி யாராவது தேடினால் தற்கொலை செய்து கொள்வேன்'' என்று எழுதி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர், அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் அந்தக் கடிதத்துடன் மகள் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கச் சென்றனர். அங்கிருந்த காவலர்கள், அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர். அதன்படி, பெற்றோர் அங்கு சென்று புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் படிக்க பிடிக்காமல் வீட்டைவிட்டுச் சென்றாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மாணவியுடன் நெருங்கிப் பழகி வந்த தோழிகள், ஆண் நண்பர்கள், அவர் யாருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.