Skip to main content

கெஞ்சிய சிறுமி: விடாத காட்டுமிராண்டிகள்

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
Girl raped


16 வயது சிறுமி தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ போராடியும், அந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கச்சேரி தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார் 16 வயதுடைய ஒரு சிறுமி. அப்போது திடீரென கனமழை பெய்தது. இதனால் அந்த சிறுமி நனைந்தார். அப்போது ஒரு ஆட்டோ சிறுமியின் பக்கத்தில் வந்து நின்றது. ஆட்டோவில் இருந்தவர்கள், மழையில் நனைய வேண்டாம், ஆட்டோவில் ஏறு என கூறியிருக்கிறார்கள். கரூர் சாலைக்கு இந்த ஆட்டோ போகுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் போகும் என்று கூறியுள்ளனர்.

 

 

இதனை நம்பி அந்த சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால், அவர்கள் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்வது போல கரூர் சாலைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குளத்தின் மறைவான பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்று 4 பேரும் சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இருப்பினும், ஆசை தீராத அந்த வாலிபர்கள் நேற்று மாலை வரை மறைவான பகுதியிலேயே வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில், மயக்கம் அடைந்த இளம்பெண்ணை அங்குள்ள தனியார் கல்லூரி அருகே இருந்த மற்றொரு குளத்தில் போட்டுவிட்டு தப்பி இருக்கின்றனர்.

 

 

காய்கறி வாங்கச் சென்ற மகள் காணவில்லையே என்று பெற்றோர் தேடியுள்ளனர். மழை பெய்ததால் நனையாமல் இருக்க எங்கேயேனும் ஒதுக்கியிருக்கலாம் என்று காய்கறி மார்க்கெட்டில் இருந்து கரூர் சாலை வழியில் உள்ள பெரும்பாலானோரிடம் தங்களது மகளின் புகைப்படத்தை காட்டி பார்த்தீர்களா என்று கேட்டுள்ளனர். கவனிக்கவில்லை, தெரியாது என்று பலரும் கூறியதையடுத்து தாலுக்கா காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்ற போலீசார் தேடியுள்ளனர்.
 

 

 

இந்த நிலையில் புதன்கிழமை மாலை குளத்தில் இளம்பெண் மயங்கி கிடப்பதாக அவருடைய பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்று பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலில் நகக் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தன. உடனே, அவர் மீது தண்ணீரை தெளித்து எழுப்பி கேட்டபோது, 4 பேர் சேர்ந்து தன்னை கடத்தி வந்து பலாத்காரம் செய்ததாக கூறி அழுதார். எவ்வளவோ கெஞ்சியும் தன்னை அவர்கள் விடவில்லை என்று கூறியிருக்கிறார்.

 

 


இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் தாலுக்கா காவல்நிலைய போலீசார் தேடி வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கரூர் சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார். 
 

 

 

சார்ந்த செய்திகள்