Skip to main content

காதலன் வீட்டுமுன் காதலி போராட்டம்...!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தாய் தந்தை இல்லாதவர். தனது சகோதரி வீட்டில் உள்ளார். அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜானகிராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி ஜானகிராமன் கீதாவை தன் வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது ஆசைக்கு இணங்க செய்துள்ளார்.

 

vellore

 

இதனை தொடர்ந்து தான் கர்ப்பமாக உள்ளதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் பல முறை அவரை தொடர்பு கொண்டு கீதா வற்புறுத்தியுள்ளார். இதை சற்றும் பொருட்படுத்தாமல் உன்னை என் தாய் மற்றும் தங்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கீதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளார். இதை அறிந்த கீதாவின் சகோதரி மற்றும் உறவினர்கள் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு கீதாவை அழைத்து வந்து கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி புகார் கொடுத்தனர்.
 

புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி விசாரிப்பதாக கூறி பலமுறை இவர்களை திருப்பி அனுப்பி உள்ளார் இரண்டு மாத காலமாக இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் கீதாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கைது செய்யும்படி வலியுறுத்தியதன் பேரில் இதற்கான வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாகவும் நீங்கள் சென்று நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி கூறியுள்ளார். 
 

இதை அறிந்த கீதா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் ஜானகிராமன் முன்ஜாமீன் பெற்று விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்ததால் ஜானகிராமன் வீட்டு முன்பு ஏப்ரல் 13-ம் தேதி சென்று தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 
 

இதனை கேள்விப்பட்டு உமராபாத் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் கீதா, இதே வீட்டில் பலமுறை அவரை பலாத்காரம் செய்ததாகவும், அவரை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதார்.
 

அவரை சமாதானம் செய்துவிட்டு போலீஸார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஜானகிராமன் இல்லாததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் தர்ணாவை முடிக்காமல் அங்கேயே உள்ளார்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.