Skip to main content

காணாமால் போன சிறுமி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு! 

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Girl passed away in well near viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகில் உள்ள கொடுக்கன் குப்பம் எனும் ஊரைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் 15 வயது மகள், மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதி முதல் காணவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் அவரைத் தேடிப் பார்த்தனர்.

 

இதனால் கவலை அடைந்த பெற்றோர், செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 5ம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என புகார் அளித்தனர். இதுகுறித்து  மகளிர் போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அதே கிராமத்தில் உள்ள துளசி என்பவரது விவசாயக் கிணற்றில் மாணவி சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு மாணவியின் பெற்றோர் சென்று பார்த்தனர். அங்கு மாணவியின் உடல் கிணற்றில் மிதப்பதை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

 

இது குறித்து வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வளத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவம் நடந்த கிணற்றுக்கு விரைந்து சென்றனர். அங்கு சடலமாக மிதந்த மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாணவியின் மரணம் எப்படி நிகழ்ந்தது, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் அவரது உயிர் இழப்புக்கு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்