Skip to main content

தந்தையை கொன்ற மகள் விடுதலை! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Girl has been released from police custody in father case

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், தனது இளைய மகளிடம் வரம்பு மீறி நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது மகள் அருகிலிருந்த கத்தியால் தனது தந்தையின் மார்பில் குத்தியுள்ளார். அதில் 11 அங்குலம் ஆழத்திற்கு அந்தக் கத்தி அவரது நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகள் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட அவர், போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர், “எனது தாய் இறந்த பிறகு, பாட்டி வீட்டில் தான் நானும் என் சகோதரியும் வளர்ந்து வந்தோம். அவர் தற்போது சென்னையில் வேலை செய்து வருவதால் நான் பாட்டி வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது பள்ளி திறக்கப்பட்டு உள்ளதால் நான் படிக்கும் அவலூர்பேட்டை பள்ளிக்குச் செல்வதற்குப் பாட்டி வீட்டிலிருந்து தினசரி சென்று வருவதற்குச் சிரமம் ஏற்பட்டது. அதனால் எனது சொந்த ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்தேன்.

 

இந்த நிலையில் எனது தந்தை, தான் பெற்ற மகளென்றும் பாராமல் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அவரிடமிருந்து அவ்வப்போது தப்பித்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த என்னிடம், தந்தை குடிபோதையில் எல்லை மீறி நடந்து கொண்டார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கடுமையாகப் போராடினேன். ஆனால், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்து போனார். அப்போது செய்வதறியாது திகைத்த நான், பக்கத்து வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இதை எப்படி வெளியே சொல்வது என்று புரியாமல் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் நான், அவரை யாரோ கத்தியால் குத்தியது போல நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று நடந்த சம்பவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து மாவட்ட காவல் காவல்துறை, ‘இந்தியத் தண்டனைச் சட்டம் விதி 100ன் கீழ்’ ஒரு பெண் தனியாக இருக்கும்போது, அவரது கற்புக்கு ஆணிடமிருந்து தீங்கு ஏற்படுமானால் அவரிடமிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலையில், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லாத காரணத்தினால் இதுபோன்று நடந்து கொள்ளலாம். அப்படி நடந்துகொண்ட பெண்களுக்குத் தண்டனைச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதனடிப்படையில் மாணவியைக் கைது செய்து விடுதலை செய்வதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். மேலும் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.