ADVERTISEMENT

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்... வெளி மாநிலம் வரை நீளும் விசாரணை!

01:28 PM Jun 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்திற்குப் புகார் வந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஈரோடு எஸ்.பி சசிமோகன் உத்தரவின்படி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்து காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சிறுமியின் தாய் அவரது மகளுக்கு 3 வயது இருக்கும் போதே கணவனை பிரிந்து சையத் அலி என்ற பெயிண்டர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் பருவமடைந்த உடனே கருமுட்டை விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளார். வளர்ப்புத் தந்தை சையத் அலி சிறுமியின் தாய் துணையுடன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும், கருமுட்டையை விற்பனை செய்ய உதவியதும் தெரிய வந்துள்ளது. இப்படி பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் பொழுதும் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இடைத்தரகராகச் செயல்படும் மாலதிக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளனர். கருமுட்டையை கொடுத்து பணம் பெற ஏதுவாக சிறுமியின் வயதை 20 என காட்ட போலி ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளனர். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறுமியின் கருமுட்டையை பணம் கொடுத்து வாங்கிக் கொண்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

நேற்று இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இரண்டு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவமனைகளின் ஊழியர்களிடையே விசாரணை நடத்தினர். அதேபோல் மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் 8 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மாவட்ட நல குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதேபோல் சிறுமி கருமுட்டை விற்பனைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரியவந்த நிலையில், அதனடிப்படையில் முதற்கட்டமாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT