தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைப் பக்கம் உள்ள புளியரைப் பகுதியின் தாட்கோ நகர் காலனியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிரான்சிஸ் ஆண்டனி. ரேசன் அரிசியைக் கடத்த முயன்றதாக அவர் மீது புளியரை போலீசார் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்நிலையில், அவரை நேற்று (22.06.2021) போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். இதனிடையே பிரான்சிஸ் ஆண்டனி, போலீசார் தன்னைத் தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அடமிட் ஆனார்.
இச்சூழலில் அவரின் மகளான சபிதா திடீரென மருத்துவமனை அருகில் உள்ள செல்ஃபோன் டவர் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தியவர், தன் தந்தையைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீழே இறங்க மறுத்தார். அவரைப் பெரும்பாடுபட்டு போலீசார் சமாதானப்படுத்திய பிறகு தன் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
அதன் பின் மறுநாள் தன் வீட்டு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறியவர், தங்கள் குடும்பத்திற்குப் போலீசார் நெருக்கடி தருவதாகக் கூறிப் போராட்டம் நடத்தினார். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கீழே இறங்கினார். இளம் பெண்ணின் போராட்டம் காரணமாக பரபரப்பாகியிருக்கிறது செங்கோட்டை.