Gautama Chikamani MP Appeared again at the enforcement office

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்தியக் காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம், அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்தச்சோதனை நடத்தப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதையொட்டி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வைத்து 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற எம்.பி.யுமான கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜரானதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருவதாகச்சொல்லப்படுகிறது. கௌதம சிகாமணி நேற்று மாலை அமாலாக்கத்துறையில் ஆஜாராகி விளக்கம் அளித்து இருந்தார். முன்னதாக அமைச்சர் பொன்முடி இன்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.