Skip to main content

வாயுக்கசிவு; ஆலை நிர்வாகத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
gas leakage; Pollution Control Board orders for plant management

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலைக்கு, துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, ‘எண்ணூரில் ரசாயன ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட காரணமான பைப் லைனில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராம்/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா 2090 மைக்ரோ கிராம்/m3 ஆகவும், கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா 49mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்ட இடத்தை இன்றைக்குள் கண்டறிந்து சரிசெய்யப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அமோனியா கசிவு ஏற்பட்ட குழாயை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உடைப்பை சரிசெய்த பின் கடல்சார் வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகே அமோனியா வாயு குழாயை இயக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ணூரில் கடையடைப்பு போராட்டம்!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Lockdown struggle in Ennoor

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

‘மணலி - எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள்’ - தமிழக அரசு அறிவிப்பு

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
New projects to improve the livelihood of people living in Manali-Ennore areaTN Govt

தமிழ்நாட்டில், வடசென்னை பகுதியின் வளர்ச்சிக்கென "வடசென்னை வளர்ச்சித் திட்டம்" தொடர்பான அறிவிப்பு, கடந்த 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அதற்கான விரிவான செயல் திட்டம் தமிழ்நாடு அரசால் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கும் வரை, பல்வேறு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மாசு சுமை, உமிழ்வு விதிமுறைகள், கழிவுகள் மற்றும் பறக்கும் சாம்பல் வெளியேற்றம் மற்றும் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீரின் தரத்தை கண்காணிப்பதற்காக சிறப்பாக ஒரு மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் நவீன தானியங்கி அமைப்புகள் மூலம் மாசுக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்க இந்த மையம் தகுதிவாய்ந்த ஊழியர்களைக் கொண்டிருக்கும். இந்த மையத்திற்கு உதவியாக மணலி மற்றும் எண்ணூர் பகுதியில் பிரத்யேகமாக இரண்டு பறக்கும் படைகள் நிறுத்தப்படும்.

மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம் ஒரு அவசரகால நடவடிக்கைக் குழுவை அமைக்கும், இது வழக்கமான மாதிரி பயிற்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு பொறுப்பாகும். இப்பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துணர்வு நிறுவனம் சிறப்பு நோக்க நிறுவனத்தை அரசு ஏற்படுத்தும். மணலி - எண்ணூர் பகுதியில் பெருமளவிலான நகர்ப்புற பசுமையாக்குதல், நீர்நிலைகளைப் புனரமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கை, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள ஒரு சிறப்பு நிதி உருவாக்கப்படும்.

இந்த சிறப்பு நிதிக்கான ஆதாரம், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமும், தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலமும் உருவாக்கப்படும். இப்பகுதியில் உள்ள அனைத்து சிவப்பு வகை தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தணிக்கையை தொழில் பாதுகாப்பு இயக்குநரகம், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளும். திருவொற்றியூரில் 50 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை மற்றும் 100 படுக்கைகள் கொண்ட நகர்ப்புற சமுதாய நல மையம் ஆகிய இரண்டு அரசு மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. உடனடி மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்படும்.

இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணி, நீர் தெளிப்பான்கள் மூலம் தூசி மாசுபாட்டைக் குறைப்பதற்கான விரிவான திட்டத்தை உள்ளடக்கிய திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து சாம்பல் அணைக்கட்டுக்கு ஈரமான சாம்பலை எடுத்துச் செல்லும் குழாய்கள் புதுப்பிக்கப்படும். மீன்வளத் துறை, உள்ளூர் மீனவ சமூகங்களை ஈடுபடுத்தி நிபுணத்துவ முகமைகளின் உதவியுடன் இப்பகுதியில் நிலையான மீன்பிடிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எண்ணூர் கழிமுகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை புனரமைக்கும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. இப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உதவும் வகையில் இப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மீட்டெடுக்கவும் இத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் எண்ணூர் மணலி பகுதிகளில் உள்ள தொழில்சார் திறன் தேவைகளை கண்டறிந்து இளைஞர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தலை சிறந்த நிறுவனங்களுடன் இணைந்து பயண ஊக்கத்தொகையுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சி வழங்கப்படும். அம்மோனியா வாயு கசிவு குறித்து விசாரிக்கப்படும் விசாரணையில், விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அமோனியா வாயு கசிவு குறித்து ஏற்கெனவே ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அக்குழுவின் இறுதி அறிக்கை பெறப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.