கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார். கேஸ் விலை குறைப்பு, இந்தியா கூட்டணிக்கான நெருக்கடியா என்ற கேள்விக்கு, “இல்லை, இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி” என்றும், பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஆச்சரியமில்லை” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.சுதர்சனம், துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.