gas cylinder incident in salem

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் கடந்த 23 ஆம் தேதி ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் கடந்த 23 ஆம் தேதி கோபிநாத் என்பவரின் தாயார் ராஜலக்ஷ்மி சமைப்பதற்காக எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்த பொழுது எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்தது. ஏற்கனவே கேஸ் கசிவு இருந்ததை அறியாமல் அடுப்பைப் பற்றவைத்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில் அருகிலிருந்த வீடு, மாடியிலிருந்த வீடு என மொத்தம் 4 வீடுகள் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மொத்தம் 11 பேர் மீட்கப்பட்ட நிலையில் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் மூதாட்டி ராஜலக்ஷ்மி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயணைப்புத்துறையில் பணியாற்றி வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி, கார்த்திக்ராம் ஆகியோர் பல மணி நேர தேடுதலுக்குப் பின் சடலமாக மூவரும் மீட்கப்பட்டனர். அதேபோல் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மற்றொரு மூதாட்டி எல்லையம்மாள் என்பவரின் உடலும் கைப்பற்றப்பட்டது. இந்த விபத்துச் சம்பவத்திற்கு ஆழ்த்த வருத்தம் தெரிவித்திருந்த தமிழக முதல்வர் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதேபோல் இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்ட கோபி என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment