கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குவியும் குப்பைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வெள்ளாற்றில் மலை குவியலாக குவித்து வந்தனர்.

Advertisment

  garbage into river; District Collector Action

இக்குப்பை குவியலால் தூர்நாற்றம் வீசுவதாகவும், குப்பைகளை தரம் பிரித்து செயல்படும் கிடங்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதனை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக குப்பைகளை ஆற்றில் கொட்டி வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் கொட்டப்பட்ட அனைத்து குப்பைகளும் அடித்து செல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் பேரூராட்சி நிர்வாகமும் சுமைதூக்கும் லாரி மூலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இச்சம்பவத்தால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அதிரடியாக செயல்பட்டு குப்பைகளை கொட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குணசேகரனை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் குப்பைகளை, கழிவுகளை கொட்டும் சம்பவம் இனிமேல் நடைபெறாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.