
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதும், போலீசார் அதனை கைப்பற்றி கடத்தல் நபர்களை கைது செய்வதும் வாடிக்கயாகி வருகிறது. அந்த வகையில் வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக ஒடிசா, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்பட்டு பிடிபடுவது தொடர்கதையாகி வருகிறது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் நிலையங்களில் ரயில்வே மற்றும் ஆர்.பி.எப் போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து புவனேஷ்வர் விரைவு ரயிலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் எழும்பூர் ஆர்பிஎப் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
வந்திருந்த பயணிகளில் ஒருவர் மட்டும் போலீசாரை பார்த்தவுடன் கூட்டத்தில் மறைந்து கொண்டு சென்றதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த சூட்கேஸை ஆய்வு செய்தனர். அதில் பண்டல் பண்டலாக சுமார் 19 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒரிசாவைச் சேர்ந்த மதன் குமார் செட்டி என்று தெரிய வந்தது.
அவரிடம் மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சூட்கேஸை எக்மோர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று சொல்லும் நபருக்கு கால் செய்து கொடுத்துவிட்டு வந்தால் போதும் என சொல்லி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் எக்மோரில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் சம்பந்தப்பட்ட நபருக்கு கால் செய்த பொழுது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அம்பத்தூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அடுத்த கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.