ADVERTISEMENT

‘விளையாட்டுக்காக கொலை செய்தோம்’ - போலீசாரையே அதிர வைத்த கும்பலின் வாக்குமூலம்

07:22 AM Nov 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே முதியவர் ஒருவரைக் கொலை செய்த நபர்கள் விளையாட்டுக்கு கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ளது மணக்கரை கீழக்கரை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த மணி (60 வயது) என்பவர் அந்தப் பகுதியில் ஆடு மேய்த்து வருகிறார். மணிக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். மகன், மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மணி, மரத்தடி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த கும்பல் ஒன்று மணியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் அதே மணக்கரையைச் சேர்ந்த சங்கரசுப்பு, லட்சுமணன், சீனி பாண்டியன், பேச்சிமுத்து, ராமையா, இசக்கிமுத்து உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை முன்பகையால் நிகழ்ந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்தனர். இது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பொழுது, கொலை செய்யப்பட்ட மணிக்கும் தங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. சும்மா விளையாட்டுக்காக கொலை செய்தோம் எனத் தெரிவித்துள்ளனர். விளையாட்டுக்காக கொலை செய்தோம் என்ற கொலையாளிகளின் வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT