Skip to main content

“கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்” - வி.ஏ.ஓவின் நேர்மை பக்கங்கள்!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

  gang of sand smugglers incident VAO in Tuticorin

 

ஏப் 25 மதியம் 12.30 மணி வாக்கில் தனது அலுவலகத்திலிருந்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரியான லூர்து பிரான்சிஸ். மதிய வேலைகளை முடித்து விட்டு உணவுக்காக கிளம்புகிற நேரத்தில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு பேர் தனியாக இருந்த வி.ஏ.ஓ.வின் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

 

வந்தவர்களை வி.ஏ.ஓ. ஏறிட்டுப் பார்ப்பதற்கு முன்னரே அரிவாட்களை ஓங்கியவர்கள் வி.ஏ.ஓ.வை வெட்ட முற்பட்ட போது அரண்டு போன வி.ஏ.ஓ.தன்கைகளால் தடுத்திருக்கிறார். ஆனால் வெட்டு சரமாரியாக அவரின் கைகளில் விழுந்திருக்கிறது. அலறிய லூர்து பிரான்சிஸ் உயிர் தப்பிக்க முயன்ற போது வளைத்த கொலை வெறியர்கள், அவரின் தலையிலும் தோள்களிலும் வெட்டியிருக்கிறார்கள். ரத்தச் சகதியில் அலறிக் கொண்டு வீதிக்கு ஓடி வந்த வி.ஏ.ஓ.வினால் மேற்கொண்டு நகரமுடியாமல் மயங்கிச் சரிந்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த வி.ஏ.ஓ.வை பார்த்து, எப்டிடா எம்மேல புகார் குடுப்ப என்று வந்தவர்களில் ஒருவர் கர்ஜித்து விட்டுத் தப்பியிருக்கிறார்கள்.

 

அலுவலகத்தின் முன்பாக கதறிக் கொண்டிருந்த வி.ஏ.ஓ.வின் பயங்கரம் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, சம்பவ இடம் வந்த ரூரல் டி.எஸ்.பி. (பொறுப்பு) சத்யராஜ், இன்ஸ்பெக்டர் ஜமால் உள்ளிட்ட போலீசார் வி.ஏ.ஓ.வை மீட்டு உடனடியாக அருகிலுள்ள பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தகவல் போய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன் சூழலை ஆய்வு செய்தவர் ஸ்பாட் விசாரணை நடந்தியதுடன் காரணமான கொலையாளிகளைப் பிடிக்குமாறு அனைத்து விசாரணை யூனிட்களையும் விரைவுபடுத்தியிருக்கிறார்.

 

இதனிடையே மருத்துவமனை சிகிச்சையிலிருந்த வி.ஏ.ஓ. சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கிறார். அங்கு வந்த மாவட்டக் கலெக்டரான செந்தில்ராஜ் மற்றும் எஸ்.பி.யான பாலாஜி சரவணன் வி.ஏ.ஓ.வின் நிலை கண்டு கண்கலங்கியிருக்கிறார்கள். இதற்குள் தகவல் தீயாய் பரவிய நேரத்தில் வி.ஏ.ஓ. பயங்கரமான வகையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கொதித்துப் போன வருவாய்துறை ஊழியர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். தென் மாவட்டமே பற்றிக் கொண்ட சூழல்.

 

அலுவலகப் பணியிலிருந்த அரசு அதிகாரி பட்டப்பகலில் படுகொலைக்குள்ளான காரணம் குறித்து நாம் பரவலாக தகவல் திரட்டிய போது, மணல் மாஃபியாக்களின் பழிவெறியும், மணல் கடத்தலில் குறுக்கிடுவதுமே பிரதானமான வன்மம் என்பது பட்டவர்த்தனமாகவே வெளிப்பட்டது. இதனிடையே கொலை தொடர்பாக ஒருவரான ராமசுப்பிரமணியன் என்பவரை உடனடியாகப் போலீசார் வளைத்திருக்கிறார்கள்.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் தங்கச் சுரங்கமான கனிம வளங்களைக் கொண்ட பல பகுதிகளில் முதன்மையானது பரணியாறு ஒடும் கரையோரமான முறப்பநாடு. அந்தப் பகுதியும் அருகிலுள்ள கலியாவூர் கிராமத்தின் இரண்டு எல்லைகளும் சந்திக்கிற இடத்தில் தாமிரபரணியின் மணற்குவியலைக் கொண்ட அள்ள அள்ளக் குறையாத தங்கச்சுரங்கம் தான். அதன் காரணமாகவே அந்தப் பகுதியில் திருட்டு மணல் கடத்தவதும் மாஃபியாக்களின் அட்ராசிட்டியும் தொடர் சம்பவமாகியிருக்கிறது. ஆனாலும் முறப்பநாடு மணல் கொள்ளை என்பது ஆழமாக வேரூன்றிப்போன விஷயம். எத்தகைய கடிவாளத்திற்கும் கட்டுப்படாத மணல் மாஃபியா உலகம். தங்களின் நோக்கம் நிறைவேறுவதற்காக மாஃபியாக்கள் எந்த எல்லையையும் தாண்டுவார்கள் என்கிறார்கள்.

 

இந்தச் சமயத்தில் தான் ஆதிச்சநல்லூரில் வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு பணிமாறுதலாகி முறப்பநாடு கிராமத்திற்கு வந்திருக்கிறார். பணியில் நேர்மை, கடமை தவறாதவர். விசுவாசமான பணியாளரான லூர்து பிரான்சிஸ் தரப்பட்ட பணியினை பழுதின்றி செய்பவர். அவர் பணியிலிருந்த காலத்தில் சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு காரியத்தையும் அனுமதித்ததில்லை என்கிறார்கள். மணற் கொள்ளையோ, ஆக்கிரமிப்போ எதுவானாலும் கண்டிப்பாக நடந்து கொள்கிற லூர்து பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலியாவூர் பகுதியின் ராமசுப்பிரமணியன் என்பவர் மணல் கடத்தும் போது விரட்டியிருக்கிறார் ஆனால் அவர் தப்பியோடியிருக்கிறார்.

 

ஆனாலும் விடாத வி.ஏ.ஓ. முறைப்படி ராமசுப்பிரமணியன் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி நடந்தவைகளை மாறாமல் புகார் தர அதன்படி முறப்பநாடு போலீசார் ராமசுப்பிரமணியன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறார்கள். இந்த பக்கா எப்.ஐ.ஆர். தன் மீது பதியப்பட்டதால் வி.ஏ.ஓ. மீது கடுமையான ஆத்திரம் வன்மத்திலிருந்திருக்கிறார் ராமசுப்பிரமணியன். மேலும் ராமசுப்பிரமணியன் ஏற்கனவே திருட்டு மணல் பிசினஸில் இருப்பவர். அதையே தொழிலாகக் கொண்டவராம். அவர் மீது மணல் கடத்தல் உள்ளிட்ட பிற வழக்குகள் என்று முறப்பநாடு, சிவந்திபட்டி, தூத்துக்குடி ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பக அதிகாரிகள்.

 

இதனிடையே மணல் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவர, இதற்கு காரணமான வி.ஏ.ஓ. மீது கடும் ஆத்திரத்திலிருந்திருக்கிறார் ராமசுப்பிரமணியன். இந்தச் சூழலில் தான் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தனியாக இருந்ததை நோட்டமிட்டுக் கொலைச் சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். மாவட்டக் கலெக்டரான செந்தில் ராஜ் கூறுகையில், “வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் பணியில் நேர்மையானவர். அரசாங்க சொத்துக்களுக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்பவர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தான் அங்கு பணிமாறுதலாகி வந்தவர். கைகளிலும் தலையின் பல இடங்களிலும் வெட்டியிருக்கிறார்கள். ரொம்பவும் வேதனையாயிருக்கு” என்றார் உடைந்த குரலில். முதல்வர் ஸ்டாலின் வி.ஏ.ஓ.வின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கியும் உத்தரவிட்டவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.