
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் திருப்பதி(53). இவருடைய மனைவி சக்தி. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகே பூதலூர் பகுதியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் குடும்பத்துடன் தஞ்சாவூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காகத் திருப்பதி அவருடைய மனைவி சக்தி மற்றும் மகன் விக்னேஷ் ( 26 )மற்றும் மருமகள் சங்கவி ஆகியோருடன் புதூர் பூங்குளம் பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி சக்தி ஆகிய இருவரும் தஞ்சாவூர் சென்ற நிலையில் அவருடைய மகன் விக்னேஷ் மற்றும் மருமகள் சங்கவி ஆகிய இருவரும் நேற்று தஞ்சாவூர் சென்றுள்ளனர்.
மேலும் புதூர்பூங்குளம் பகுதியில் தன்னுடைய வீட்டிற்கு விக்னேஷ் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில் திடீரென இன்று காலை விக்னேஷ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போன் மூலமாக பார்த்துள்ளார். அப்போது சிசிடிவி கேமரா திசைமாறி இருப்பதைக் கண்டு உடனடியாக அதே பகுதியில் வசித்து வரும் தன்னுடைய சித்தப்பாவான பூபதி என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சித்தப்பா பூபதி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் தங்கநகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் இது குறித்துத் திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்கநகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.