2 வருடமாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வரவழைத்து, கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, துர்நாற்றம் குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றில் சோதனை செய்ததில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து, அந்த பெண் சடலம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கச்சிராயபாளையத்தை சேர்ந்த நர்சிங் மாணவி அமராவதி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

மாணவி அமராவதியும், அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற காதலன் குணசேகரனின் ஆசை வார்த்தை காட்டி வற்புறுத்தியுள்ளார். இதன் பின், குணசேகரின் வார்த்தையை நம்பி, மாணவியின் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அமராவதி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, காதலன் குணசேகரன் மாணவியை தனது ஆசைக்கு இணங்க கோரி வற்புறுத்தியுள்ளார். மாணவியும் காதலினின் வற்புறுத்தலால் இணங்கியுள்ளார். ஆனால், தொடர்ச்சியாக காதலன் குணசேகரன் தனது நண்பர்கள் இருவருக்கும் இணங்குமாறு வற்புறுத்தி மாணவி அமராவதியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதன் பின்பு மாணவியை வெளியே விட்டால் சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிவித்து விடுவார் என்ற பயத்தில் அமராவதியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி, தலையில் கல்லை போட்டு மூவரும் கொலை செய்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து, அமராவதியின் உடலை ஒரு பாழடைந்த கிணற்றில் கல்லை கட்டி போட்டுவிட்டு, எதுவும் நடக்காதது போல் மூவரும் சாதாரணமாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில் நடந்த சம்பவம் முழுவதும் தெரிய வரவே மாணவியை கொலை செய்த மூவரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 15 வயது சிறுவனையும் கைது செய்துள்ளனர்.

காதலனை நம்பி சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.