காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது கைது செய்திருந்த நிலையில், இந்த சம்பவத்தில் கைது நடவடிக்கையின் போது தப்பியோட முயன்ற ஐந்து குற்றவாளிகளில் மூன்று பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வெப்பமேடு குண்டுகுளம் பகுதியில் கிராமப்பகுதியை ஒட்டி வந்தவாசி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலைப்பகுதியை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் அமைந்துள்ளன. ஆனால், இடையிடையே வயல் மற்றும் காட்டுப்பகுதிகள் காணப்படுகிறது. நேற்று மாலை தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்து வந்த மாணவியை அழைத்து வந்து குண்டுகுளம் பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அந்தப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 5 பேர் மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், விமல், சிவக்குமார், விக்னேஷ், தென்னரசு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இது தொடர்பாக போலீசார் குண்டுகுளம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய பொழுது தப்பித்து ஓட முயன்ற மணிகண்டன், தென்னரசு உள்ளிட்ட மூன்று பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.