Skip to main content

‘நோட்டம் பார்த்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ள கும்பல்’ - அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!     

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Gang that has a habit of stealing, Police arrested in action

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்துவருகிறார். சமீபத்தில் இவர் தனது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளைச் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகளைக் காணவில்லை. இதுகுறித்து சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

 

அதில் விநாயகமூர்த்தியின் வயலுக்குப் பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் மூவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த், பிரவீன்குமார், இளங்கோவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விவசாய வேலை செய்வதுபோல் வெளியூர்களுக்குச் சென்று, அப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்வதையும் அவை இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளையும் நோட்டம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

பிறகு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் டாட்டா ஏசி வாகனங்களில் ஆடு, மாடுகளைக் கடத்திச் செல்வது இவர்களது தொழிலாக இருந்துள்ளது. இதன்படி அரசன்குடி கிராமத்தில் விநாயகமூர்த்தி ஆடுகளைத் திருடிய மேற்படி மூவரும் சேலம் மாவட்டம் வெடிகாரன் புதூர் என்ற கிராமத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள், நான்கு மாடுகள் அவற்றை கடத்திச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

அவற்றை ஆடு, மாடுகளைப் பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தனர். ஆடு, மாடு கடத்தலில் ஈடுபட்ட மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சில ஆண்டுகளாகவே வேப்பூர், லக்கூர், தொழுதூர், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஆடு, மாடுகளைப் பில்டர்கள் டாட்டா ஏசி வாகனங்களில் கடத்திச் செல்லும் சம்பவம் நடைபெற்றுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆடு, மாடு திருடர்கள் சிலரை சிறுபாக்கம் போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.