Skip to main content

தமிழக மக்களே உஷார்! அடுத்தடுத்து வரும் ஃபோன் கால் - மிரட்டும் கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 gang extorts money from people claiming to be involved in cannabis trafficking

சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கொள்ளையர்கள், ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தொடர்பு கொண்டு சில விபரங்கள் கேட்பார்கள். அப்போது ஓடிபி எண் கூறினால் மட்டுமே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும். ஆனால் இப்போது பல வகைகளிலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவரது பான் கார்டு எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல விஷயங்களை மோசடியில் ஈடுபடுபவர்கள் சுலபமாக எடுத்து விடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து மோசடி கும்பல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதும், இந்த முறையில் ஏமாற்ற முடியவில்லை. அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு லிங்க் அனுப்பி, அதனை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் வரும் அல்லது வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மோசடி அறிவிப்புகளைக் கொடுத்து குறிப்பிட்ட அந்த லிங்கை தொடும்போது நமது பணம் பறிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபர்கள், தற்போது பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், தங்களைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் என்றும், மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தற்போது மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதே பாணியில் கடந்த 4  நாட்களில் 2 சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை கடந்த சில  தினங்களுக்கு முன்பு, சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இந்த முகவரிக்கு போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண்ணிடம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க தங்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதன்படி, அந்தப் பெண்ணும் 21,400 ரூபாயை உடனே அனுப்பியுள்ளார். இந்தியன் வங்கிக் கணக்கு மூலம் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோன்று இந்த சம்பவம் நடந்த மறுதினம், ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் வசித்து வரும் ராம் திலக் என்ற காவலரின் மனைவி அனுஷாவிற்கும் இதே பாணியில் போன் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்களின் ஆதார் எண்ணை வைத்து போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் கூறி, பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அறிய முயன்றுள்ளனர். ஆனால் அனுஷா அதனைத் தவிர்த்து விட்டார். அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் பேசிய அனுஷா, என் மீது போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு உள்ளது என்றால் சென்னை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அவர்கள் எங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள் எனத் தைரியமாகக் கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வட மாநில கும்பல் தொடர்பைத் துண்டித்து விட்டனர். இதில் முழுக்க முழுக்க மோசடி கும்பல் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அதன் பிறகு அனுஷா நடந்தவற்றை தனது கணவர் ராம் திலக்கிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்‌. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் இந்த நூதன மோசடி குறித்து விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.