Skip to main content

மூதாட்டிகளைக் குறிவைத்து நகை திருடும் கும்பல்...!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

The gang that constantly steals jewelry  in a strange way ...!


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ளது திருச்சிற்றம்பலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது விஜயராணி. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். விஜயராணி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர் வீட்டருகே தங்கள் பைக்கை நிறுத்திவிட்டு விஜய் ராணியின் அருகில் சென்றனர். அப்போது, அந்த மர்ம நபர்கள் விஜயராணியிடம் தாங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் அந்த நிறுவனம் மூலம் தங்களுக்கு பரிசுப்பொருட்கள் குலுக்கல் முறையில் விழுந்துள்ளது, எனவே அதனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு வருமாறு கம்பெனி நிர்வாகம் கூறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

 

அவர்கள் உத்தரவின்பேரில் அந்த பரிசுப் பொருளை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அதை ஒப்படைத்தற்கு அடையாளமாக உங்களை புகைப்படம் எடுத்துச் சென்று கம்பெனி முதலாளியிடம் காட்ட வேண்டும் என்று அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்ட மூதாட்டி விஜயராணி சந்தோஷத்தில் ஃபோட்டோ எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஃசெல்போன் மூலம் போட்டோ எடுக்க போகும்போது நீங்கள் கழுத்தில் தங்க நகைகள் போட்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கக் கூடாது  எனவே அதைக் கழட்டி வைக்குமாறு கூறியுள்ளனர். 


உடனே தன் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையைக் கழட்டி வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். விஜயராணியை அந்த மர்ம நபர்கள் ஃபோட்டோ எடுத்து முடித்தவுடன் அவரிடம் உங்கள் கணவருடைய பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ வேண்டும், அதனை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அவர் அந்த ஃபோட்டோ எடுப்பதற்காக வீட்டுக்குள் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவர் கழட்டி வைத்த 8 சவரன் நகையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

 

Ad

 

மர்ம நபர்கள் நகையை எடுத்துச் செல்வதைப் பார்த்து பதறிப்போன விஜயராணி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால், அந்த மர்ம நபர்கள் அதற்குள் தங்கள் வந்த பைக்கில் ஏறி பறந்துவிட்டனர். நகையைப் பறிகொடுத்த விஜயராணி, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நகையை எடுத்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்று மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் மூன்றுக்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.