Ganesha statues ready .. Manufacturers worried ..

தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள், விநாயகர் ஊர்வலங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. ஊர்வலமாகக் கொண்டு செல்லும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது கரையும் தன்மையிலும் சுற்றுச்சூழலை, நீர்நிலைகளை பாதிக்காத வகையில் வண்ணங்கள் தீட்ட வேண்டும் என்று பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

களிமண் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதால் வாழ்வாதாரம் இழந்திருந்த மண்பாண்ட கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு சில மாதங்கள் வேலைவாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.ஆனால், கடந்த ஆண்டு முதல் கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் கடந்த ஆண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அப்படியே தேங்கியுள்ளன. ஆனால் இந்த வருடம் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாததால் இந்த வருடமும் ஆயிரக்கணக்கான சிலைகளை செய்து வைத்துள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், வாராப்பூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், செரியலூர் என பல இடங்களிலும் களிமண் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், துவரடிமனை கிராமத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்து, வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. குடும்பம் குடும்பமாகவும், சம்பள ஆட்கள் மூலமாகவும் சிலைகள் செய்யப்படுகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பிள்ளையார், முதலைமீது சவாரி செய்யும் பிள்ளையார், ஆயுதங்களுடன் பிள்ளையார், லிங்கம் தூக்கும் பிள்ளையார், ஏர் ஓட்டும் பிள்ளையார், கரோனா கிருமியை மிதித்து அழிக்கும் பிள்ளையார் என ஏராளமான வகையில் அரை அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இதுகுறித்து பிள்ளையார் சிலைகள் செய்து வரும் துவரடிமனை சங்கர் கூறும் போது, “கடந்த பல வருடங்களாக மண்பாண்டங்களை மக்கள் வாங்குவது குறைந்து வருவதால் இளைய தலைமுறை இந்த வேலை செய்ய முன்வரவில்லை. சம்பளத்திற்கு ஆள் கூட்டி வந்து சிலைகள் செய்கிறோம். கரோனாவால் போனவருடம் செய்த பிள்ளையார் சிலைகள் தேங்கிவிட்டன. இதனால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. குடும்பமே நடத்த சிரமப்பட்டோம். இந்த வருடமாவது நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கையில் சிலைகள் செய்து வருகிறோம். நிறையபேர் வந்து பார்க்கிறார்கள். அரசு அனுமதி கிடைத்தால் வாங்குவதாக சொல்கிறார்கள். தற்போது கரோனா குறைந்திருப்பதால் பல நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ள அரசு விநாயகர் சதுர்த்திக்கும் கட்டுப்பாடுகளோடு அனுமதி அளித்தால் எங்கள் கலைஞர்கள் குடும்பங்களும் வாழும்” என்றார்.