Skip to main content

செங்கோட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. 

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள செங்கோட்டையில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கடைகள் உடைக்கப்பட்டு கலவரம் ஏற்பட்டது.இதையடுத்து இந்த ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ், எஸ்.பி.அருண்சக்திகுமார் ஆகியோரின் நேர்கண்காணிப்பில் 1500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 

நகர் முழுவதும் 30 கண்காணிப்பு கேமராக்கள் இரண்டு ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமராக்கள் இயக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் தென்காசி கோட்டாட்சியர் பழனிசாமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊர்வலத்தை அமைதியாக நடக்க ஏற்பாடுகளை செய்தனர். இதன்படி காலை 11 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்குள் ஊர்வலம் நடத்தப்பட்டு சிலைகள் விஜர்சனம் செய்யப்பட வேண்டும் என்று முடிவானது.

ஊர்வலத்தை நடத்தி முடிக்க இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு துவங்கிய ஊர்வலம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி கரைக்கப்பட்டன. செங்கோட்டை நகரில் மட்டும் 34 சிலைகள் இவ்வாறு விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடத்தி முடித்ததில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையின் பங்கு பாராட்டுக்குரியது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.