Skip to main content

கஜா புயல் தாக்கி 6 மாதமாகியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை; உடனடியாக வழங்க சிபிஎம் கோரிக்கை 

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

 


கடந்த ஆண்டு நவம்பர் 16 ந்தேதி வீசிய கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டம் மிகக்கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. ஏராளான மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால், கிராமப்பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. 

 

c

 

இதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடி ஊராட்சியைச் சேர்ந்த கருவன்குடியிருப்பு கிராமத்தில் மின் கம்பிகளைத் தாண்டிச் சென்று தான் வீடுகளுக்கு தண்ணீர் எடுக்கக் செல்ல வேண்டும். 25 நாட்களாக மின்சாரம் இல்லாததால் கம்பிகளை தூக்கி ஒதுக்கிக்கொண்டு கிராமத்தினர் தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருந்தனர்.

 

அதே போலத்தான் 10.12.2018 அன்றும் அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கி.செ. முத்துச்சாமி, மனைவி சுசீலா(வயது48), கருவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சக்திவேல்(வயது24) ஆகிய இருவரும் தண்ணீர் எடுக்கச் சென்றனர். அப்போது புயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பிகளை ஒதுக்கிக்கொண்டு தண்ணீர் எடுப்பதற்காக மின்கம்பிகளை பிடித்துள்ளனர். 25 நாட்களுக்கு பிறகு கீழே கிடந்த மின்கம்பிகளில் மின்சாரம் வந்த்தால் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பொழுது தமிழக அரசு அறிவித்திருந்த கஜா புயலில் இறந்தவர்களுக்கான ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் பொதுமக்கள் சுமார் 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் “மின்சாரம் தாக்கி இறந்த நபர்களுக்கு நிவாரணம் தலா ரூ.10 லட்சம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணம் பெற்று வழங்கப்படும் எனவும், இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு விதிகளின்படி கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என எழுத்துப்பூர்வமாக கோட்டாட்டசியர் உறுதியளித்துள்ளார்.

 

அதன் பிறகு சடலங்களை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுதித்தனர். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருவருக்கும் தனது சொந்த பணத்தில் தலா ரூ. ஒரு லட்சம் நிதி வழங்கியதுடன்..  கஜா புயல் நிவாரணமான ரூ.10 லட்சம் கிடைப்பதற்கு முதலமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அங்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 

தொடர்ந்து சில நாட்களில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேருக்கு முதலமைச்சர் பொது நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதிலும் சுசீலா, மற்றும் சக்திவேல் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.   ஆனால், சுமார் 5 மாதங்கள் கடந்தும் இருவருக்கும் இதுநாள் வரை எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. 


 
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைநேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவுக்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் புயலில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் காலங்கடத்தினால் கூட்டணிக் கட்சிகளை இணைத்து போராட்டங்களை நடத்துவோம் என்றனர். 
                

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.