ADVERTISEMENT

கஜா புயலினால் மக்காச்சோளம் பாதிப்பு - விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய இ.பெரியசாமி!

07:56 PM Nov 19, 2018 | sakthivel.m

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, ஆத்தூர், கலிக்கம்பட்டி மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கச்சோள பயிர்களை பயிரிட்டு இருந்தனர்.

ADVERTISEMENT

கஜா புயலினால் ஆத்தூர் ஒன்றியம், எஸ்.பாறைப்பட்டி மற்றும் அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் நாசமடைந்தன. செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினரும், தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி வருடத்திற்கு ஒருமுறை தான் மானாவாரியாக இப்பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம், பருத்திகளை பயிரிடுகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை விளையக்கூடிய பயிரை வைத்துதான் அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 20ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை வட்டிக்கு கடன் வாங்கி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கஜா புயலினால் அறுவடைக்கு தயாராக இருந்து மக்காச்சோள பயிர்கள் நாசமடைந்துள்ளன. அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 30ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார். ஒவ்வொரு முறையும் புயல் மற்றும் மழை காலங்களில் ஆத்தூர் தொகுதிகளில் பயிர்கள் சேதமடைந்தால் வருவாய்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பதும் இல்லை, உரிய நிவாரணமும் கொடுப்பதும் இல்லை. இம்முறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளருடன் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி சி.ராமன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் மல்லையாபுரம் சக்திவேல், ஒன்றிய அவைத்தலைவர் காணிக்கைசாமி, பாறைப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் இ.எம்.வாஞ்சிநாதன் மற்றும் விவசாய அணி துணை அமைப்பாளர் வி.ராஜா, ஆர்.நடராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வட்டாரத் தலைவர் எம்.எஸ்.வி.தெய்வம் உட்பட கட்சி பொறுப்பாளர்களும், விவசாயிகளும் பலர் கலந்து கொண்டனர்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT