Skip to main content

கஜா தந்த சோகம் - நெல், தானிய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுது

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

 

n


    கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆழ்குழாய் பாசனத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் மற்றும் சிறு தானிய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்பனைக்காடு, கறம்பக்குடி ஒன்றியத்தில் சில கிராமங்கள், அறந்தாங்கி ஒன்றியப் பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களில் கல்லணை கடைமடைப் பாசனத்தில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஆனால் கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, பலா, வாழை விவசாயம் செய்யப்பட்டாலும் ஆழ்குழாய் நீர்பாசனத்தில் பலர் நெல் விவசாயம் மற்றும் கடலை, சோளம், பயறு போன்ற விவசாயம் செய்து வந்தனர். இவற்றிக்கு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது.

 

    இந்த நிலையில் கடந்த நவம்பர் 16 ந் தேதி தாக்கிய கஜா புயலில் மரங்களுடன் மின்கம்பங்களும் உடைந்து நாசமானதால் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு பிறகு முதல்கட்டமாக வெளியூர் மின்வாரிய பணியாளர்கள் குடிதண்ணீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்தனர். அதன் பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 70 சதவீதம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெளியூர் மின்வாரிய ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அதனால் மின்சாரம் கொடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மூழ்கி மோட்டார்கள் இயக்கும் அளவிற்கும் மின் இணைப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.  அதனால் நெல், சோளம், பயறு, கடலை போன்ற சிறு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிவருகிறது. 

 

    இது குறித்து கீரமங்கலம், வடகாடு பகுதி விவசாயிகள் கூறும் போது.. கஜா புயல் தாக்கிய பிறகு வெளியூர் மின்வாரிய ஊழியர்கள் வந்து சிறப்பாக பணி செய்தனர். அவர்களின் பணியால் அனைத்து கிராமங்களுக்கும் குடிதண்ணீர் தொட்டிகளுக்கு மின் இணைப்பு கிடைத்தது. 60 முதல் 70 சதவீதம் வீடுகளுக்கும் மின் இணைப்புகள் கிடைத்தது. ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அதன் பிறகு மின் ஊழியர்கள், மின்கம்பங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போது குறைவான மின் ஊழியர்கள் மட்டும் இருப்பதால் அந்தந்த பகுதி இளைஞர்கள் மின்கம்பங்களை ஊன்றி, மின்கம்பிகளை இணைத்து வருகின்றனர்;. மேலும் வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் வகையில் 2 கம்பிகள் மட்டுமே பொருத்தப்படுகிறது. அதனால் நீர்மூழ்கி மோட்டார்களை இயக்க முடீயாத நிலை உள்ளது. மேலும் தற்போது 2 கம்பிகள் மட்டும் பொருத்துவதால் மீண்டும் மற்ற 2 கம்பிகளை இணைக்க மறுபடியும் மின்வாரிய ஊழியர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து பகுதிகளுக்கும் 4 மின்கம்பிகளை பொருத்தவதுடன் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முழுமையாக மின் இணைப்புகள் விரைந்து வழங்க மீண்டும் வெளியூர் மின்வாரிய ஊழியர்களையும், கூடுதல் மின்கம்பங்களை வழங்கினால் புயல் பாதிப்பில் எஞ்சியுள்ள பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் சிறு பயிர்கள் விரைவில் கருகி விவசாயிகளுக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.