Skip to main content

பாராளுமன்றத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க தயாரா? ராஜா சவால்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
c

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தென்னை சங்கத்தின் மாநில பொது செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் முன்னாள் எம்.எல்.ஏக்.கள் ராஜசேகரன், புஷ்பராஜ், முன்னால் அமைச்சர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா எம்.பி. பேசியதாவது..  ‘’கஜா புயலால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளை  மத்தியக் குழு ஆய்வு செய்தது. ஆனால் அந்தக் குழுவின் அறிக்கை மீது எந்த விதமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை பகிரங்கமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

 

சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே தலா ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும், மகளிர் சுய உதவி குழு கடனையும் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்களைக் கடந்தும்கூட மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. அதனால்தான் தற்போது ஆங்காங்கே மக்கள் போராட தொடங்கியுள்ளனர். அரசு அறிவித்துள்ள நிவாரணமே போதாது என்ற நிலையில், அரசு அறிவித்த தொகையைக் கூட கொடுப்பதற்கு முன்வரவில்லை.

 

c

 

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட தானே, ஒக்கி புயல் பாதிப்புகளின் போது மத்திய அரசு எப்படி நடந்து கொண்டதோ அதே போன்று தான் இந்த புயல் பாதிப்பு நிவாரணம் வழங்குவதிலும் நடந்து கொள்கிறது. கேட்கும் தொகையை கொடுக்காத மத்திய அரசு மீது மாநில அரசு அழுத்தம் கொடுக்க ஏன் மறுக்கிறது?. 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும் அழுத்தத்தைக்கூட மாநில அரசு கொடுக்கவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை அவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக வலியுறுத்தும். ஆனால் இது பற்றி பா.ஜ.க விவாதிக்க விடாமல் கோயில் கட்டுவது பற்றியே விவாதிப்பார்கள். பா.ஜ.க கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க தயாராக? என்று கேள்வி எழுப்பினார்.


தொடந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென  ராஜாவிடம் வலியுறுத்தினர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலிசாரிடம் கஜா புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததுடன் அவர்கள் பல நாட்களாக விடுப்பின்றி வேலையில் ஈடுபட்டுள்ளதை அறிந்து பாராட்டினார்.

 

cpi

 

 ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் பேசும் போது,   இத்தனை பெரிய இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். ஆனால் அரசு இயந்திரம் மொத்தமாக செயல்பட வில்லை. விவசாயிகள் செய்வதறியாது நிர்கதியாக நிற்கிறார்கள். ஆறுதல் சொல்ல வேண்டிய மத்திய, மாநில அரசுகள் ஒதுங்கி நிற்கிறது.  அதனால் அந்தந்த பகுதி இளைஞர்கள் அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. சேலத்தில் ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க முன்வந்த அரசுகள் டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 1100 என்று சொல்வது விவசாயிகளில் வேற்றுமை காண்கிறது. கணக்கெடுப்பு பணிகளும் முறையாக நடைபெறவில்லை. அதனால் விரைவில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


        

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் விரையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் குழு

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Communist Party of India delegation from Manipur

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மணிப்பூரில் கலவரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. இந்த குழுவினர் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மணிப்பூரில் 4 நாட்கள் தங்கியிருந்து அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவில் பினோய் விஸ்வம், கே.நாராயணா, ராமகிருஷ்ண பாண்டே, அசோமி கோகாய் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிகின்றனர். இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை மணிப்பூரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

 

Next Story

டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020


 

டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் இன்று (18.05.2020) நடைபெற்றது. இரங்கல் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த் செல்வம் முன்னிலை வகித்தார்.
 


இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் நீதி வேண்டி இன்று வரை 11 ஆண்டுகள் கடந்தும் போராடுகிறார்கள். மேற்கண்ட போராட்டத்தை லண்டனில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, உலகளாவிய தமிழ் அமைப்புகளான கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழ் நடவடிக்கை குழு, உட்பட ஜெர்மணி, ஸ்விட்சர்லாந்து, பின்லாந்து, இத்தாலி, பிரான்சு, நியூஸிலாந்து, நார்வே, தென் ஆப்ரிக்க, பெல்ஜியம் போன்ற உலகில் உள்ள 35 தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்து சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது.
 

கடந்த 2009 இல் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையான நிகழ்வு அனைத்து நாட்டினரையும் வேதனை அடைய செய்தது. அங்கு நடந்த மனித உரிமை மீறலையும், போர்க்குற்றங்களையும் செய்த இலங்கையைத் தண்டிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வு விசாரணை வேண்டி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.
 


இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக இந்தியா ஐ.நா.வில் தமிழ் மக்களுக்காக இலங்கைக்கு எதிரான குரல் கொடுத்து முனைப்பு காட்ட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.
 

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்ட ஏற்பாடுகளைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராம்சங்கர் ராஜா செய்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வசந்த குமார், ஜெகன், மயில்சாமி, சிவகுமார், சாந்தகுமார், சரத், லோகேஷ், சித்ரகலா, வைஜெயந்தி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கோவிட் 19 விதியைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.