Skip to main content

 புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இரவில் ஆய்வு செய்ததால் விவசாயிகள் அதிருப்தி!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

 

v


    வடகாடு மற்றும் மாங்காடு பகுதியில் புயல் பாதித்துள்ள பகுதிகளை மத்திய ஆய்வுக்குழுவினர் இரவில் ஆய்வு செய்ததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். 

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு தென்னை, பலா, தேக்கு, சந்தனம் மற்றும் பல வகையான மரங்களும் வாழை தோட்டங்களும் சேதமடைந்தது. மேலும் பல ஆயிரம் வீடுகளும் சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பள்ளி போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இந்த பாதிப்புகளை பார்வையிட மத்திய ஆய்வுக்குழுவினர் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தனர்.

 

இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்துறை இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், மின்துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கல், நீர்வளத்துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா,  நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் இளவரசன் ஆகிய ஏழு பேர்கள் கொண்ட ஆய்வுக்குழுவினர் வந்திருந்தனர். இவர்களுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோரும் ஆய்வுக்குழுவினருடன் சென்று பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

 

    கீரனூர் பகுதியில் மாலையில் ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழுவினர் இரவு 7.30 மணிக்கு பிறகு வடகாடு வடக்குப்பட்டி, கல்லிக்கொல்லை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அப்போது ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் பாதிப்புகள் குறித்து விளக்கியதுடன் ஆலங்குடி தொகுதியில் அதிகமான பாதிப்புகள் உள்ளதால் ரூ. ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று மனு கொடுத்தார். தொடர்ந்து மாங்காடு சில பகுதியில் ஆய்வு செய்தனர்.


    மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மத்திய குழுவினர் இரவில் ஆய்வு செய்வது என்பது எப்படி சாத்தியமாகும். பாதிப்புகள் எப்படி இரவில் தெரியும். தரைமட்டமாக உடைந்து கிடக்கும் மரங்களை விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் எப்படி கணக்கிட முடியும் என்று அதிருப்தி தெரிவித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.