Skip to main content

கஜாபுயல் நிவாரணத்தை கடனில் கழிக்க துடிக்கும் வங்கிகள்; வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
g

 

கஜாபுயல் பாதித்த பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கிவரும் நிவாரண பணத்தை எடுக்கமுடியாதபடி விவசாயிகளின் வங்கி கணக்குகளை வங்கிகள் முடக்கிவருகின்றன.  விவசாயிகள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை கட்டச்சொல்லி வங்கிகள் கெடுபிடி செய்வதாக விவசாயிகளும், பொதுமக்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.   அரசு வழங்கிய 10ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை எடுக்கமுடியாததால், வீடுகளை  சீர்செய்ய முடியாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள் பொதுமக்கள்.

 

கஜாபுயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வேதாரணயம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தாலுக்காவும் முதலிடம் வகிக்கிறது.  புயலால் பாதித்த பகுதிகளில் வீடுகளை சீர் செய்வதற்காக தமிழகஅரசு சார்பாக ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் அவரவர்களின் வங்கி கணக்கில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரவு வைக்கபட்டுவருகிறது. 

 

g

 

இந்தநிலையில் நாகை மாவட்டத்தின் கடலோர கிராமங்களான புதுப்பள்ளி, விழுந்தமாவடி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயக்கடன், கல்விக்கடன், சுயஉதவிகுழுக்கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களின் வங்கிகணக்குகளை பணம் எடுக்கமுடியாதபடி முடக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அரசு வழங்கிய சொற்ப நிவாரனமான 10 ஆயிரம் ரூபாயைக்கூட எடுக்க முடியாமல் புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

 

"கஜாபுயலின் கோரதாண்டவத்தினால், குந்தி எழுந்த வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரமாக இருந்துவந்த மரங்கள், கால்நடைகள் உள்ளிட்ட  அனைத்தையும் இழந்து வீதிகளில் விதியை நினைத்து பொங்கி கால்வயிறு பசியாறும் அப்பாவி மக்களிடம் அவர்கள் வாங்கிய சொற்ப கடனுக்காக நிவாரனத்தில் ஈடுகட்ட நினைப்பது கண்டிக்கதக்கது. " என்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர்.

 

பாதிக்கப்பட்ட மக்களோ,  " 10ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துதான் வீடுகளை சரிசெய்ய திட்டமிட்டு இருந்தோம், ஆனால் அந்த பணமும் தற்போது கிடைக்காமல் போகும் நிலையாகிடுச்சி.  வீடுகள் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறோம்.  நிவாரனமாக கிடைத்த குறைந்த பணத்தை எடுப்பதற்கு வங்கிக்கு போனால்,கல்வி கடன், விவசாய கடனை திரும்ப செலுத்தினால் மட்டுமே இந்த பணத்தை எடுக்க முடியும் என விழுந்தமாவடி IOB வங்கி கிளை மேலாளர் ஒருமையில் திட்டிவிரட்டுகிறார்." என்கிறார்கள்.

 

g


 
 விவசாயி ஒருவர் கூறுகையில், " தமிழக அரசு உடனடியாக நிவாரண பணம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும், பல நாட்கள் போராடி கிடைத்த சொற்ப நிவாரண தொகையையும் வங்கி கணக்கில் வந்தபிறகும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுவதுபோல் வங்கி அதிகாரிகள் செய்வது வேதனையாக இருக்கிறது. அதில் அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்திட செய்யவேண்டும், " என்கிறார்.

 

பல்லாயிரக்கணக்கான கோடிகளை கடனாக வாங்கி ஏமாற்றிவிட்டு அரசியல்வாதிகளின் துணையோடு பவனிவரும் இந்த நாட்டில்தான், பலரின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் விவசாயிகள் வாங்கிய சொற்ப கடனை அவர்கள் கட்டவில்லை என அவமானப்படுத்துவதும், வரலாறு காணாத புயலால் காட்டவில்லை என அவமானப்படுத்துவதும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த குறைந்த நிவாரணத்தையும் கடனுக்காக பிடுங்க நினைப்பது வேதனையாக இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.