Skip to main content

கஜா 2-ம் ஆண்டு நினைவு தினம்... மாறாத வாழ்க்கை! 

Published on 15/11/2020 | Edited on 16/11/2020
 Gaja 2nd Anniversary .. Unchanging Life!

 

2018 ம் ஆண்டு நவம்பர் 15 ந் தேதி இரவு கஜா புயல் கரையை கடக்கிறது என்று வானிலை அறிவிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை அடுத்தடுத்து மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கி 11 மணிக்கு பிறகு லேசான காற்றும் வீசத் தொடங்கியது. 12 மணிக்கு பிறகு வீசிய காற்றில் கடல் காற்றின் வாசனையை உணர்ந்தார்கள் உள்மாவட்டத்தில் உள்ள மக்கள். வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்தனர். வழக்கம் போல புயல் அறிவிப்பு வரும், பிறகு வலுவிழந்து போகும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

 

1 மணிக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரிகத் தொடங்கியதும் தான் மக்களுக்கு சிறிய பதற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்து காற்றின் வேகம் அதிகரித்து தென்னை மரங்கள் மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. நீண்ட நேரம் சாய்ந்தும் உயர்ந்துமாக எழுந்த தென்னை மரங்கள் வேரோடு சாயத் தொடங்கியது. அடுத்தடுத்து மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், வேம்பு, புளி, ஆலமரம், அரசமரம் என்று அத்தனை மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல வீடுகளில் மரங்கள் விழுந்தது. பல உயர்கள் பறிபோனது. ஆடுகள் தண்ணீர் அடித்துச் சென்றது. விடியும்போது கஜாவின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்து காணப்பட்டது புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்.

 

மீனவர்களின் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து கிடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல வழியில்லை முழுமையாக மரங்கள் விழுந்து கிடந்தது. உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் சாலைகள் சீரமைக்கப்பட்டு குடிதண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுத்த நிவாரணப் பொருட்கள் பல நாட்கள் உதவியது மக்களுக்கு. அதன் பிறகு மின்கம்பங்களை சீரமைக்க இளைஞர்களை கொண்டே சீரமைக்கப்பட்டது.

 

தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை கொண்டு வந்த கொடுப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெடுவாசலில் நின்று சொல்லிவிட்டுப் போனார் ஆனால் இதுவரை ஒரு தென்னங்கன்று கூடவரவில்லை. அதேபோல வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொன்னதோடு சரி புயல் நிவாரண வீடுகள் ஏதும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.  

 

புயல் தாக்கி இரண்டு வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையிலும் கூட இழப்பீடுகளும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் அரயப்பட்டி பகுதியில் குடிதண்ணீர் எடுக்கச் சென்று மின்சாரம் தாக்கி இறந்த 2 பேருக்கு புயல் நிவாரணம் மற்றும் அரசு வேலை கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தும் இன்றுவரை எந்த நிவாரணமும் அந்தக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் தென்னை, பூ விவசாயிகள் இன்னும் பழைய நிலையை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். மீண்டும் பழைய நிலையை எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்கிறார்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.