Skip to main content

கெயில் எரிவாயு குழாய் பாதையை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது! அன்புமணி

Published on 05/03/2018 | Edited on 05/03/2018


 

gail-pipeline


கெயில் எரிவாயு குழாய் பாதையை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. மத்திய அரசின் ஆணைக்கு பணிந்து, விளைநிலங்களில் குழாய்களை பதிக்க தமிழக அரசு துணைபோனால் அதற்கு எதிராக உழவர்கள் மத்தியில் வரலாறு காணாத எழுச்சி உண்டாகி, அது போராட்டமாக வெடிக்கும் என்று கூறியுள்ளார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் மங்களூருக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதற்கானத் திட்டம் அடுத்த 30 மாதங்களில்  செயல்படுத்தி முடிக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார். உழவர்களின் நலன்களை பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
 

கெயில் நிறுவனம் அமைக்கவுள்ள இந்த எரிவாயுக் குழாய் பாதை தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக  செயல்படுத்தப்பட  உள்ளது. இத்திட்டம் நாசகாரத் திட்டம் என்பதால் இதற்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன. இந்த விவகாரத்தில்  ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்ட இரட்டை நிலையால் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் விவசாயிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், உழவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை கெயில் நிறுவனத்தால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்படக் கூடாது என்பது விவசாயிகளின் நிலை அல்ல. விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையோரங்களில் இந்த குழாய்களை பதிக்க வேண்டும்  என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் உழவர்களின் நிலை ஆகும். கேரளத்திலும், கர்நாடகத்திலும் எரிவாயுக் குழாய் பாதைகள் சாலையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் விளைநிலங்களில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம் புரியவில்லை. கொச்சியிலிருந்து சாலையோரமாகவே குழாய்களை புதைக்கலாம் என பல்வேறு தரப்பிலும் யோசனைகள் தெரிவிக்கப்பட்ட பிறகும், அதற்கான சாத்தியங்கள் என்பது குறித்து ஆய்வு கூட செய்யாமல், வேதாளம் மீண்டும், மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப்  போன்று விளைநிலங்களின் வழியாகத் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு மீண்டும், மீண்டும் கூறுவதை ஏற்க முடியாது. உழவர்களின் நலன்களில் மத்திய அரசுக்கு சிறிதளவு கூட அக்கறை இல்லை என்பதைத் தான் இந்த விஷயத்தில் அதன் செயல்பாடுகள் உறுதி செய்கின்றன.
 

கெயில் எரிவாயுத் திட்டத்தை விளை நிலங்களின் வழியாக செயல்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. இத்திட்டத்திற்காக 5,842 விவசாயிகளுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் நிலங்களுக்கு ரூ.3 லட்சம் வரையே இழப்பீடு வழங்கப்படும் என்று கெயில் அறிவித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எந்த வகையில் போதுமானதாக இருக்கும் என்பதையோ, இதுகுறித்து விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் விருப்பங்களை அறிந்து தீர்வு காணலாம் என்பதையோ மத்திய அரசு நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 310 கி.மீ. தொலைவுக்கு 20 மீட்டர் அகலத்தில் எரிவாயு குழாய் அமைக்கும் இத்திட்டத்தால் லட்சக்கணக்கான மா, பலா, தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும். குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டும் பகுதிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழவகை மரங்களை வெட்ட வேண்டியதிருக்கும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், அந்த இடத்தில் குறைந்தபட்சம் 10 மரங்களையாவது நட வேண்டும். அதன்படி, 12 லட்சம் மரங்களை நடுவது கெயில் நிறுவனத்தால் சாத்தியமில்லாத ஒன்று என்ற நிலையில், விவசாயத்தையும், சுற்றுசூழலையும் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை கெயில் நிறுவனம் ஆராய்வது தான் ஆக்கப்பூர்வமான செயலாக அமையும்.
 

இதுகுறித்தெல்லாம் ஆராயாமல் மத்திய அரசின் ஆணைக்கு பணிந்து, விளைநிலங்களில் குழாய்களை பதிக்க தமிழக அரசு துணைபோனால் அதற்கு எதிராக உழவர்கள் மத்தியில் வரலாறு காணாத எழுச்சி உண்டாகி, அது போராட்டமாக வெடிக்கும். அதற்கு வழிவகுக்காமல், விளைநிலங்களின் வழியாக  குழாய் பாதைகளை அமைக்கும் திட்டத்தை கை விட்டு, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்; தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.