Skip to main content

கடல் சீற்றம்; பலத்த காற்று-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Furious Sea; Strong winds-District Collector warning

 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தப் புயல் எதிரொலி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய விட்டு கனமழை பொழிந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.  இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் மிக்ஜம் புயல் உருவாக உள்ளது. வங்கக்கடலில் இன்று  மிக்ஜம்புயல் உருவாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

புயல் எதிரொலி காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார். அதேபோல் மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சூளேரிக்காடு, மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 43 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். மழை பாதிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தலும் கொடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.