Skip to main content

50 ஆயிரம் செலவில் ஆதரவற்ற பெண்ணின் இறுதி ஊர்வலம்! 

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
km

 

மனநிலை பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்ணின் இறுதி ஊர்வலத்தை இளைஞர்கள், பொதுமக்கள் அமர்க்களமாக நடத்தினார்கள். அவர் வளர்த்த நாய்களும் சுற்றி சுற்றி வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் காமாட்சி (55). திருமணம் செய்யப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கீரமங்கலம் பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, நகரம் சன்னதி பகுதிகளில் மரத்தடியிலும் பயணிகள் நிழற்குடையிலும் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த பகுதியில் உள்ளவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டவர் தனக்கு துணையாக தெருக்களில் சுற்றி திரியும் நாய்குட்டிகளை எடுத்து வந்து வளர்ப்பார். தனக்கு வாங்கும் சாப்பாடு, டீ, போன்றவற்றை அந்த நாய்குட்டிகளுக்கு கொடுத்து வளர்த்து வந்தார். எப்பவும் காமாட்சி கையில் ஒரு நாய் குட்டியும், தனக்கு பின்னால் பல நாய்களும் வருவது வழக்கம். ஆனால் அந்த நாய்கள் அந்த வழியாக செல்வோரை கடிக்கவோ, குரைக்கவோ விடமாட்டார். 

 

ki

 

பொதுமக்களிடம் மிகவும் அன்பாகவும் நடந்து கொண்டதால் அவரை அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.


 இந்த நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலை கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் ஒரு கடையின் ஓரத்தில் படித்திருந்த இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்தது தெரியாமல் அவர் வளர்த்து வந்த செல்ல நாய்குட்டிகள் எப்போதும் போல காமாட்சியின் சடலத்தின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் தனது எஜமானி எழவில்லை என்பதை பார்த்த பிறகு அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது அந்த நாய்கள்.

 

km1


    
காமாட்சி இறந்துவிட்ட தகவல் அறிந்து அங்கு வந்த பெண்கள் கதறி அழுதனர். மேலும் கீரமங்கலம் சுற்றுவட்டார இளைஞர்கள், பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மேளங்கள் கொட்ட தொடங்கினார்கள். அதே போல மாலைகள், புதிய புடவைகள் வாங்கி வந்ததுடன் இறுதி ஊர்வலத்திற்காக வாகனம் ஏற்பாடு செய்து சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் வானவேடிக்கைகளுடன் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வாகனங்களின் அணிவகுப்புடன் ஊர்வலமாக அம்புலி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். 

 

ஆதரவற்ற மனநிலை பாதித்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை அமர்க்களமாக நடத்திய இளைஞர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.


 மனநிலை பாதித்திருந்தாலும் நாய்கள் போன்ற செல்லபிராணிகளிடம் மிகவும் அன்பு காட்டி தனக்கு கிடைக்கும் உணவை நாய்களுக்கு கொடுத்து வளர்த்தவர் காமாட்சி. குழந்தைகளிடமும் அன்பாக நடந்து கொண்டவர் என்பதால் தான் இத்தனை மக்களும் திரண்டு வந்து மனநிறைவோடு செலவு செய்து ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர் என்றனர் இளைஞர்கள்.

சார்ந்த செய்திகள்