தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பொதுமுடக்கம் தளர்வுகள் இல்லாமல் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை ஒட்டிய திருவள்ளூர் அத்திப்பட்டு டாஸ்மாக்கில் கட்டுக்கடங்காத அளவில் முண்டியடித்துக் கொண்டு கூட்டம் கூடியதால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாளை பொதுமுடக்கம் மற்றும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும் என்பதால் சென்னையை ஒட்டிய மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடியது. இன்று டூவீலர்கள் மூலம் அதிகமானோர் டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால், கூட்டம் கட்டுக்குள் வரவில்லை. எனவே அந்த டாஸ்மாக் கடை தாற்காலிகமாக மூடப்பட்டது.