Full lockdown in Karnataka; Tamilnadu DGP Important Instruction

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகக் கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக போலீஸ் டிஜிபி முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்து தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29 ஆம் தேதி 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத்தெரிய வருகிறது. இது சம்பந்தமாக கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடுமற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளூர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் உயர் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் இதர சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ள தொடர்பு அலுவலகமாக கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் 9498170430, 9498215407” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.